Saturday 24 August 2013

தங்க நகை சேதாரக் கணக்கு


ல்ஜிப்ரா கணக்கு என்ன, ஐன்ஸ்டீன் சொன்ன அணுப்பிளவு கொள்கையைக்கூட புரிந்துகொண்டுவிடலாம், ஆனால், தங்க நகைகளுக்குக் கடைக்காரர் சொல்லும் சேதாரக் கணக்கை மட்டும் யாராலும் புரிந்துகொள்ளவே முடியாது. உள்ளபடி சேதாரம் என்றால் என்ன, சேதாரம் என்கிற பெயரில் ஏன் இவ்வளவு பணத்தை நம்மிடம் வாங்குகிறார்கள், கடைக்காரர்கள் அந்தச் சேதாரத்தை என்ன செய்வார்கள் என்கிற மாதிரியான பல கேள்விகளை ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெய்னிங் சென்டர் இயக்குநர் சுவாமிநாதனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
”எந்தப் பொருளை தயாரித்தாலும் அதில் சேதாரம் என்பது கட்டாயம் இருக்கும். மற்ற பொருட்களில் நாம் இந்தச் சேதாரத்தைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. காரணம், பொருளின் அடக்கவிலையிலேயே சேதாரத்தைச் சேர்த்திருப்பார்கள். ஆனால், தங்கத்தின் விலை அதிகம் என்பதால் தங்க நகைகளின் சேதாரம் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது.
இயற்கையாகக் கிடைக்கும் தங்கம் ஒவ்வொரு கட்டமாக இழைத்து, ஆபரணமாக மாற்றப்படுகிறது. இப்படி மாறும்போது ஒவ்வொரு நிலையிலும் சேதாரம் ஏற்படும். இந்தச் சேதாரத்தைத் தவிர்க்கவே முடியாது. தங்க நகைகளை கைகளாலும் செய்யலாம்; இயந்திரங்கள் மூலமும் செய்யலாம். நம்மூர் வாடிக்கையாளர்கள் கையால் செய்த நகைகளை அதிகம் விரும்புகிறார்கள். காரணம், அது நீடித்து உழைக்கும். கைகளினால் செய்த நகையில் ஏதாவது பிரச்னை என்றால் அதை எளிதில் சரிசெய்யமுடியும். அதே இயந்திரத்தில் செய்தது எனில், அதன் உறுதித்தன்மையானது குறிப்பிட்ட காலத்திற்கே இருக்கும். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதை சரி செய்தது அப்படியே தெரியும். ஆனால், மெஷின் கட்டிங் மூலம் செய்யும்போது கைகளினால் செய்த நகைக்கு ஆகும் சேதாரத்தைவிட குறைவாகவே இருக்கும்.
கைகளால் நகை செய்யும்போது அதிகமான தங்கத்தைத் தரவேண்டி இருக்கும். அதாவது, 24 கிராம் எடைகொண்ட செயினை செய்ய 30 கிராம் தங்கத்தை நகை செய்பவரிடம் தரவேண்டியிருக்கும். 30 கிராம் தங்கக் கட்டியை முதலில் நெருப்பால் சுட்டு, அதை கொல்லன் பட்டறையில் அடித்து சதுரமாக ஆக்கவேண்டும். ஒவ்வொருமுறை நெருப்பில் சுடும்போதும்
30 கிராம் தங்கக் கட்டியில் 0.010 கிராம் எடை குறையும். பிறகு கம்பி பிடிக்கும் இயந்திரத்தில் தங்கக் கட்டியை கம்பியாக்கி முடிக்கும்போது சுமார் 0.100 கிராம் முதல் 0.150 கிராம் வரை எடை குறையும். பிறகு கம்பியைத் துண்டு, துண்டாக வெட்டி அந்த துண்டுகளை டிசைனுக்கேற்ற வடிவத்தில் மடக்கவேண்டும். அதன்பிறகு மடக்கிய கம்பிகளை ஒன்றுக்கொன்று மாட்டி இணைக்கவேண்டும். கடைசியாக இணைப்பான் (soldring) மூலமாக இணைக்கப்படும்.
இறுதியாக, கட்டிங் இயந்திரத்தில் டைமண்ட்டூல் மூலமாக கட்டிங் செய்வார்கள். இதுதான் நகை தயாரிப்பின் கடைசி நிலை. இப்படி செய்யும்போது நகை மினுமினுப்பு ஏற்படும். அந்தச் சமயத்தில் தங்கம் மணல் தூள்போல் பறக்கும். இதை ஓரளவிற்கு சேகரித்துவிடுவார்கள். அந்தக் கட்டத்தில் 0.100 கிராம் முதல் 0.200 கிராம் வரை எடை இழப்பு ஏற்படும். ஆக, கட்டித் தங்கம் செயினாக முழுமையடையும்போது சேதாரம் 0.600 கிராமிலிருந்து 0.800 கிராம் வரை இருக்கும். இது டிசைனைப் பொறுத்து எடை இழப்பு மாறுபடும். அதோடு கூடுதலாகக் கொடுத்த 6 கிராம் தங்கத்தில் சேதாரம்போக மீதமுள்ள 5.200 கிராம் தங்கத்தை திரும்பக் கொடுத்துவிடுவார்கள்.
இப்படி செய்த செயின் நகைக் கடைக்கு வரும்போது சுமார் 1.400 கிராம் வரை சேதாரம் கணக்கிட்டு விற்பனை செய்கிறார்கள். ஆக உண்மையான சேதாரம் 0.800 கிராம்தான். கடைக்காரர்கள் 0.600 கிராம் கூடுதலாக வைத்து லாபம் சம்பாதிக்கிறார்கள். இதனுடைய தற்போதைய விலை 1,700 ரூபாய். பெரும்பாலான கடைகளில் சேதாரத்தை சதவிகிதத்தில்தான் கணக்கிடுகிறார்கள். ஒரு நகைக்கு 5 சதவிகிதம்தான் சேதாரம் என்றால் நகைக் கடைக்காரர்கள் சேதாரத்தை 3-லிருந்து 5 சதவிகிதம் வரை கூடுதலாக வைத்து விற்கிறார்கள்.
தங்கத்தின் விலை உலகளவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆகவே பெரிய, சிறிய என அனைத்து கடையிலும் ஒரே விலைதான். ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு சில தங்க நகை வியாபாரிகள் தங்கத்தின் தரத்தைக் குறைத்து சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தந்தனர். ஆனால், தற்போது சரியான தரத்தைக் கொடுத்து சேதாரத்தில் லாபத்தை வசூல் செய்துவிடுகிறார்கள்.
சேதாரம் என்பது நகையில் உள்ள வேலைபாட்டிற்குதான். எடை அதிகமாக இருந்து வேலைபாடு குறைவாக இருந்தால் அந்த நகைகளுக்குச் சேதாரம் குறைவாக இருக்கும். அதேசமயத்தில் எடை குறைவாக இருந்து வேலைபாடுகள் அதிகம் இருந்தால் சேதாரம் அதிகமாகும். ஆண்டிக் (பாரம்பரிய வடிவமைப்பு) நகைகளுக்குச் சேதாரம் அதிகமாகக் காரணம், அதிலுள்ள அதிக வேலைபாடுகளே. அதோடு அந்த நகைகளைச் செய்ய அதிக நாட்கள் ஆகும்.
“சேதாரம் கணக்கிடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. ஏனெனில், பெரும்பாலான நகைகள் கையால் செய்யப்படுகின்றன. நகை செய்பவர்களின் கைப்பக்குவத்தை பொறுத்து சேதாரம் மாறுபடும். சிலர் சேதாரம் அதிகம் ஏற்படாமல் நகையை செய்வார்கள். சிலர் அதிக சேதாரத்தில்  நகையை செய்வார்கள். தவிர, வாடிக்கையாளர்கள் எப்போதும் சொன்ன விலையை தருவதில்லை. பேரம் பேசி குறைத்துதான் வாங்குகிறார்கள். மேலும் விளம்பரம், பரிசுப்பொருட்கள், ஊழியர்களின் சம்பளம், மின்சார செலவு, பாதுகாப்பு செலவு  என நிறைய செலவுகளுக்கான பணத்தை இந்த சேதாரத்தில் தான் சேர்க்க வேண்டியுள்ளது” என தங்கம்  மற்றும் வைர வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறுகிறார்.
ஒவ்வொரு நகைக் கடையிலும் ஒவ்வொரு மாதிரியான சேதாரம் அல்லது கழிவுக்கான சதவிகிதத்தைக் கணக்கிடுகிறார்கள். இதனை வாடிக்கையாளர்களால் லேசில் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதனால் அவர்களுக்குச் சந்தேகம் வருகிறது. தங்கத்தின் தினசரி விலையை லண்டனில் ஐவர் கொண்ட குழு நிர்ணயிக்கிறது அதனை அடிப்படையாக வைத்துதான்
நகை வியாபாரிகள் சங்கம் ஒரு பவுன் தங்கத்தின் விலையில் 2 அல்லது 3 சதவிகிதத்தை லாபமாக கூடுதலாக வைத்து நகையின் விலையை அறிவிக்கிறது. இந்த லாபம் போகத்தான் இந்தச் சேதாரத்தின் மூலம் கிடைக்கும் லாபம்!” என்று முடித்தார் சுவாமிநாதன்.
தங்க நகையில் சேதாரம் என்பதெல்லாம் தென் மாநிலங்களில்தான். வட மாநிலங்களில் எல்லாம் தங்க நகைகளுக்கு தனியாகச் சேதாரம் கணக்கிடுவதில்லை. மற்ற பொருட்களை போலவே சேதாரத்தை நகையின் விலையில் சேர்த்து விற்கிறார்கள்.
தங்கத்தின் தரத்திற்கான சான்றிதழை இந்திய அரசு வழங்குகிற மாதிரி சேதாரத்திற்கு ஓர் அளவை நிர்ணயம் செய்யவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, சேதாரம் என்கிற பெயரில் சாதாரண மக்களின் பணம் கொள்ளை போவதைத் தடுக்க முடியும்!
Photobucket

No comments: