Tuesday 28 February 2017

 தாராபாரதியின்  கவித்துளி 

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன்
கைகளில் பூமி சுழன்றுவரும்

மூலையில் கிடக்கும் வாலிபனே - தினம்
முதுகில் வேலையைத் தேடுகிறாய்
பாலை வனம்தான் வாழ்க்கையென - வெறும் 
பல்லவி எதற்குப் பாடுகிறாய்

விரக்தி எனும் சிலந்தி வலைக்குள்
வேங்கைப் புலிநீ தூங்குவதா? - நீ
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சகீற்று
எங்கே கிழக்கெனத் தேடுவதா?

விழி விழி உன் விழி நெருப்பு விழி - உன்
விழிமுன் சூரியன் சின்னப்பொறி!
எழுஎழு தோழா உன் எழுச்சி - இனி
இயற்கை மடியில் பெரும் புரட்சி

நீட்டிப் படுத்தால் உலக உருண்டையில்
நீதான் பூமத்திய ரேகை - நீ
போட்டுக்கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான்
பூமி வளம் வரும் புதுப்பாதை

கட்டை விரலை விடவும் இமயம்
குட்டை என்பதை எடுத்துச்சொல் - உன்
சுட்டு விரலின் நகமாய் வானம்
சுருங்கியதென்று முழக்கிச்சொல்

தோள்கள் உனது தொழிற்சாலை- நீ
தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை!
தோல்விகள் ஏதும் உனக்கில்லை - இனி
தொடுவானம்தான் உன் எல்லை

கால்நகம் கீறிய கோடுகள் வழியே
கங்கையும் சிந்துவும் ஓடிவரும் - உன்
தோள்களிரண்டும் தெற்கு வடக்காய்
துருவங்களுக்குப் பாலமிடும்!

மன்புழுவல்ல மானிடனே - உன்
மாவலிகாட்டு வானிடமே
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே - இவை
வேலைகளல்ல வேள்விகளே -

No comments: